Saturday, September 28, 2013

பாரதிய ஜனதாவில் ரஜினி - பல தலைவர்கள் ரஜினியுடன் இணைய அதிரடி முடிவு

இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வரும் ரஜினி, தமிழக அரசியல் களத்தில் ஒவ்வொரு கால கட்டத்திலும் பரபரப்பாக பேசப்படுபவராகவே இருந்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் கொடுத்த வாய்ஸ் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினி நேரடியாகவே அரசியல் களத்தில் குதிப்பார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்தனர். அவரது படங்களிலும் அரசியல் ‘பஞ்ச்’ டயலாக்குகளும் இடம் பெற்றன.
‘‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா... வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவேன்..‘‘ என்ற வசனம் அதில் முக்கியமானது.
இதற்கேற்றார்போல ரஜினி ரசிகர்களின் செயல் பாடுகளும் இருந்தன. ‘‘தலைவா இன்னும் ஏன் தாமதம், தலைமை தாங்க வா, காத்திருக்கிறோம்...’’ என்பது போன்ற போஸ்டர்களையும் அவர்கள் ஒட்டி வந்தனர். ‘‘ரஜினியின் அரசியல் ஆசை’’ பற்றி பலமுறை நிருபர்கள் நேரடியாக அவரிடம் கேள்வி கேட்டுள்ளனர். அப்போ தெல்லாம் அவர் ‘‘எல்லாம் ஆண்டவன்கையில்’’ என்பது போன்ற பதில் அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில் பாராளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நேரத்தில் அக்கட்சியின் தமிழக தலைவரான பொன்.ராதா கிருஷ்ணன் நேரடியாக ரஜினிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் நலன்கருதி ரஜினிகாந்தை போன்ற நல்லவர்கள் பாரதீய ஜனதாவை ஆதரிக்க முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். இதன்மூலம் நீண்ட நாட்களுக்கு பின்னர் தமிழக அரசியலில் ரஜினியின் பெயர் மீண்டும் அடிபட தொடங்கியுள்ளது.
பாரதீய ஜனதாவின் அழைப்பை ஏற்று ரஜினி அரசியலில் குதிப்பாரா? பிரதமர் வேட்பாளரான மோடிக்கு ஆதரவு அளிப்பாரா? பாரதீய ஜனதாவின் முயற்சி பலிக்குமா? என்பது போன்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

No comments: